ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்திய பொலிஸ் துறை அதிகாரிகள் 17 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே.புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், கடந்த நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் இவர்களது பதவிகள் பறிபோயுள்ளன.
இவர்களின் பெயர்ப்பட்டியலை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விஷேட புலனாய்வுப் பிரிவினர் வழங்கியதாக ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சகலரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு மருத்துவ அறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதேபோன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் பல அதிகாரிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம் இவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment