தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவோம் - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Sunday, January 19, 2025

தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவோம் - விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான்)

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கி செயற்படாது. மத கொள்கையற்ற வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நிலைப்பாட்டில் உள்ளது. தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் புதிய தலைமை காரியாலயம் ஞாயிற்றுக்கிழமை (19) பத்தரமுல்லை பகுதியில் பௌத்த மத வழிபாட்டுடன் திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடு பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகளினால் நாட்டின் சுயாதீனத்தன்தை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியம் தொடர்பில் அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.

தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கி இந்த அரசாங்கம் செயற்படாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து தற்போது பேசப்படுகிறது.

இலங்கையை மத சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் அரசாங்கத்தில் முன்னிலை பதவிகளில் உள்ளார்கள். அரசாங்கமும் அந்த நிலைப்பாட்டில்தான் உள்ளது.

புதிய மாற்றத்துக்காக மக்கள் புதியவர்களை தெரிவு செய்தார்கள். புதியவர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி எவ்விடத்திலும் பேசுவதில்லை. ஆகவே புதியவர்களை தெரிவு செய்ததன் பிரதிபலனை மக்கள் தற்போது பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

அதிகாரத்தில் இருக்கும் போதும், இல்லாத போதும் மக்களின் பிரச்சினைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தேசியத்தை பாதுகாத்தால் மாத்திரமே இலங்கை என்ற அடிப்படையில் முன்னேற்றமடைய முடியும்.

தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவோம். கடந்த காலங்களை காட்டிலும் இனி உத்வேகத்துடன் செயற்படுவோம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு முரணாக தற்போது செயற்படுகிறது. ஆகவே அரசாங்கத்துக்கு கடந்த காலத்தை நினைவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment