அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம் : எம்முடன் விளையாட முடியாது என்கிறார் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம் : எம்முடன் விளையாட முடியாது என்கிறார் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

(எம்.மனோசித்ரா)

அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் ஒரு இலட்சத்து 6000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன்னும் அதிக உள்நாட்டு அரிசியும் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டிலுள்ள தரவுகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. தகவல்களுக்கிடையில் பரஸ்பர தன்மை காணப்படுகிறது. அவை சரியானவையாகவும் இல்லை.

தற்போது வரை ஒரு இலட்சத்து 6000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாயக்கிழமை (7) மேலும் 10000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 60000 மெட்ரிக் தொன் நாட்டரிசியும் காணப்படுகிறது.

அது மாத்திரமின்றி தேசிய அரிசி ஆலை உரிமையாளர்களாலும் தற்போது அரிசி விநியோகிக்கப்படுகிறது. இனியும் அரிசியை மறைத்து வைத்திருப்பதால் எவ்வித பயனும் இல்லை.

எவ்வாறிருப்பினும் சில பிரதேசங்களில் எதிர்பார்க்குமளவுக்கு அரிசி விநியோகிப்படுவதில்லை என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே அரிசி விநியோ கட்டமைப்பை பலப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.

இம்மாதம் மூன்றாம் வாரமளவில் உள்நாட்டில் உற்பத்தியான அரிசி சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும். சுமார் இரண்டரை இலட்சம் மெட்ரிக் தொன் முதல் 4 இலட்சம் மெட்ரிக் தொன் வரை அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நாமும் தீர்வினைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

தட்டுப்பாடு நிலவுகிறது என்று கூறப்படுவது எவ்வாறு தவறான தகவல் இல்லையோ, அதேபோன்று அரிசி மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறானதல்ல.

உள்நாட்டில் அரிசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நம்பிக்கை வைத்துதான் கடன் வழங்கப்படுகிறது. அமைச்சரவை அங்கீகாரத்துடன் வங்கிகள் ஊடாக இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவர்கள் கடன் பெறும்போது இணங்கியுள்ள நிபந்தனைகளை மீறினால் கருப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்படுவார்கள். மீண்டும் எந்தவொரு கடனும் வழங்கப்பட மாட்டாது. இதற்கு முன்னர் இருந்தவர்களுடன் செயற்பட்டதைப் போன்று எம்முடன் விளையாட முடியாது என்றார்.

No comments:

Post a Comment