அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் நடத்திச் செல்வதே நோக்கம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் நடத்திச் செல்வதே நோக்கம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

(செ.சுபதர்ஷனி)

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை தொடர்ந்தும், அரசாங்கத்துக்கு சுமையாக இல்லாமல் நாட்டுக்கு பயனளிக்கக் கூடிய மற்றும் அத்தியாவசியமான நிறுவனங்களாக நடத்திச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பொரளையில் உள்ள அரசாங்க அச்சகத் திணைக்களத்தில் அந்நிறுவன அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக தமது சேவைகளை வழங்கி வரும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தின், பணிகளை தொடர்ச்சியாக எவ்வித இடையூறுமின்றி முன்னெடுத்துச் செல்வது அவசியம்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் எதிர்கால பணிகளை முறையான திட்டமிட்டளுக்கமையவும் அனைத்து தொழிற்சங்கங்களின் கருத்துக்களுக்கமையவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமது நிறுவனத்தின் தரத்தை மட்டுமல்லாமல், அனைத்து நிறுவனங்களினதும் தரத்தை உயர்த்துவதுடன் அங்கு வழங்கப்படும் சேவைகளை சீரமைக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

சகல நிறுவனங்களுடனும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தனியார் நிறுவனங்களைப் போன்று இலாபம் ஈட்டக்கூடிய துறைகளில் திறந்த சந்தையை ஏற்படுத்தி அவர்களுடன் போட்டியிடுவதற்கான முயற்சியை மேற்கொள்வது அவசியம்.

மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட அரச அச்சகத் திணைக்களம் இந்நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்திற்கு அச்சுத் தொழில் பற்றிய அறிவை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ வேண்டும்.

மேலும் இளைஞர் சமூகத்தை அச்சுத் துறைக்கு ஈர்க்கக்கூடிய வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கிறேன்.

பணியாளர் எண்ணிக்கை மதிப்பாய்வு, தொழில்நுட்ப பணியாளர்களின் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல், அரச அச்சகத் திணைக்களத்துக்கு திருத்தப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தை செயல்படுத்துதல், துறைக்கான நவீன தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கும் மேம்படுத்துவதற்கும் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய விரிவான திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் யூனிகோட் முறை மூலம் மேற்கொள்வதோடு இணைய பாதுகாப்பு திட்டத்தை பலப்படுத்துவதும் காலத்தின் தேவையாகும் என்றார்.

No comments:

Post a Comment