ஸ்ரீதரன் முன்வைத்த சிறப்புரிமை மீறல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

ஸ்ரீதரன் முன்வைத்த சிறப்புரிமை மீறல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு வருத்தமடைகிறோம். இந்த சம்பவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும், தலையீடும் கிடையாது. விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என சபை முதல்வரும், சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தார். இதற்கு பதிலளிக்கையில் சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

இவ்விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விமான நிலைய தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளேன். அத்துடன் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் முன்வைத்த விடயங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்புடயவை. ஆகவே இவ்விடயம் பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் குழுவில் விசாரணைக்குட்படுத்தப்படுமாயின் திணைக்களத்தை அழைக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தமைகிறோம்.

இந்த சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதாக குறிப்பிடுவது அடிப்படையற்றது. இவர் நாட்டுக்கு திரும்பி வருகையில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு ஏதும் கிடையாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற அபிலாசையும், கொள்கையும் அரசாங்கத்துக்கு கிடையாது. இருப்பினும் மாற்றீடாக புதிய சட்டம் இயற்றப்படும் வரை இந்த சட்டத்தை கவனமான முறையில் பொது பாதுகாப்பை கருத்திற் கொண்டு அமுல்ப்படுத்த நேரிடும் என்றார்.

No comments:

Post a Comment