முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (22) மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிங்கிரிய மற்றும் நாரம்மல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ. 6,146,110 தொகையைப் பெற்று, அந்தப் பணத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது பிரசாரம் செய்தமை மூலம் அரச சொத்துகள் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி இன்றையதினம் (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment