(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கொலன்னாவையில் நீதிமன்ற உத்தரவில் வீடு உடைக்கப்பட்டவர்களுக்கு மனிதநேயத்துடன் செயற்பட்டு அவர்களுக்கு நிவாரண அடிப்படையில் வீடுகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (22) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது இடையீட்டு கேள்வி ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொலன்னாவை 101ஆம் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் 5 வீடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் உடைத்து அகற்றப்பட்டிருக்கின்றன.
அந்த மக்களுக்கு வீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் செல்லாமல் இருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறது. அது முற்றிலும் பொய்யாகும்.
அந்த இடத்தில் 118 வீடுகள் இருந்தன. கடந்த அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அந்த மக்களை அங்கு வெளியேற்றுவதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாக 10 இலட்சம் ரூபா முற்பணமாக செலுத்தும் நிவாரணத் திட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.
அன்றாடம் கூலித் தொழில் செய்து உழைக்கும் அந்த மக்களுக்கு 10 இலட்சம் வழங்குவதற்கு முடியாது. அதனால் மீண்டும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டபோது 5 இலட்சம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.
ஒரு இலட்சம் ரூபா கூட செலுத்த முடியாத நிலையிலேயே அந்த மக்கள் இருக்கின்றனர். உடைக்கப்பட்ட வீடுகளில் ஒன்றில் புற்றுநோய் உடைய நோயாளி ஒருவர் இருக்கிறார். மற்றுமொரு வீட்டில் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ள பிள்ளை ஒருவர் இருக்கிறார். மற்றுமொரு வீட்டில் தள்ளு வண்டியில் செல்லும் நோயாளி ஒருவர் இருக்கிறார். இன்றைய தினம் மேலும் 15 வீடுகள் உடைக்கப்பட இருக்கின்றன.
அந்த இடம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நீதிமன்ற உத்தரவின் பேரிலே அந்த வீடுகளை அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்தது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த மக்களை வீதிக்கு தள்ளிவிட்டு அந்த இடத்தில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு பயன் இல்லை.
அதனால் கொலன்னாாவையில் இருக்கும் வீடமைப்பு வேலைத்திட்டத்தில் மீதமாகி இருக்கும் வீடுகளை, நகர அதிகார சபையின் அனுமதியை பெற்றுக் கொண்டு, தேவை என்றால் அந்த மக்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு எஞ்சிய பணத்தை தவணை அடிப்படையில் செலுத்தும் வகையில் வழங்க முடியும்.
வீடுகளை இழந்த மக்கள் அந்த இடங்களில் தரையில் அமர்ந்திருக்கின்றனர். அதனால் இந்த மக்கள் தொடர்பில் மனிதநேயத்துடன் பார்த்து, வீட்டுத் திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை அந்த மக்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு ஆலாேசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment