அதிகரித்துள்ள இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகை மற்றும் அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் வட பகுதி மீனவர்களின் பருவகால இறால்பிடி பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகையினையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு அரசால் கட்டுப்படுத்த முடியாதெனில், அந்தப் பொறுப்பை மீனவமக்களிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் பொருளாதார விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வட பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலால் மக்கள் முற்றுமுழுதாக நசுக்கப்படுகின்றார்கள். மக்கள் அவதிப்படுகின்றார்கள். எனவே இந்த விடயத்தை புதிய அரசின் கவனத்திற்காக கொண்டுவருகின்றேன்.
இலங்கை எமது நாடு, கடலால் சூழப்பட்ட வளம் பொருந்திய நாடு. வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பூர்வீகத் தாயகம். எமது நாட்டிற்கு எல்லைகள் உண்டு. அடுத்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லைகளைத் தாண்டி வரமுடியாது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு, கடலிலே கண்காணிப்பதற்கு கடற்படை உண்டு.
இங்கே வடக்கு பகுதியில் என்ன நடக்கின்றது. முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இலட்சக்கணக்கான மீனவர்கள் வட பகுதியில் உள்ளனர். இவர்களுடைய வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது. செய்வதறியாது மக்கள் குமுறுகின்றனர். இந்திய இழுவைப்படகுகள் எமது மீனவர்களின் வாழ்க்கையைச் சிதைக்கின்றார்கள்.
ஒவ்வொரு வருடமும் மார்கழி, தை, மாசி மாதங்கள் இறால் பருவகாலத் தொழிலை வடக்கில் முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, மற்றும் வடமராட்சி உட்பட சில இடங்களிலுள்ள மக்கள் மேற்கொள்வார்கள். இப்பகுதி மீனவர்களின் வருடாந்த சேமிப்பாக இந்த மூன்றுமாதகால தொழில் அடங்கும்.
கடந்த சில வருடங்களாக இறால் சீசன் என்று சொல்லக்கூடிய, இறால் பருவ காலத் தொழில் செய்வதற்கு இந்திய இழுவைப் படகுகள் முட்டுக்கட்டை போடுகின்றார்கள். முல்லைத்தீவின் கடற்கரையோரங்களுக்கு இந்திய இழுவைப் படகுகள் வருகை தந்து இழுவைமடி, சட்டவிரோத தொழிலை செய்வதால் எமது மீனவர்களின் தொழில்கள் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.
கடற்படையினர் எமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதை விட இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத தொழில்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றார்களோ என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏன்? அண்மையில் மியன்மார் நாட்டிலிருந்து படகில் வந்த அகதிகள்கூட முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு வரும்வரை கடற்படைக்குத் தெரியாது. இந்த நிலமைகள் மாற வேண்டும்.
எமது மீனவர்கள் சுதந்திரமாக எமது கடலில் மீன்பிடிக்க வேண்டும். தங்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் பார்க்க வேண்டும். சட்டவிரோத தொழில்கள் யார் செய்தாலும் தடுக்கப்பட வேண்டும். தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
அடுத்த நாடுகளின் படகுகள் தங்களுடைய கடலில் தொழில் செய்யட்டும். எல்லை தாண்டி எமது கடற் பரப்புக்குள் அந்நியப் படகுகள் நுழைவதை கடற்படை தடுக்க வேண்டும். இதனை கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.
உங்களால் முடியாவிட்டால் எமது மீனவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படையுங்கள். கலங்களையும் தாருங்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
தயவுசெய்து வட பகுதி மீனவர்களை வாழவிடுங்கள். புதிய அரசானது பாகுபாடு காட்டாமல் எமது மீனவமக்களைப் பாதுகாக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment