(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தின் தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு அடிக்கடி பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொள்ள அங்கிருக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பாராளுமன்றத்தில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
இது தொடர்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என நான் நினைக்கிறேன். இதனுடன் சம்பந்தப்பட்ட சிலர் பணி இடை நிறுத்தப்பட்டடிருக்கின்றனர். மேலும் சிலர் ஓய்வுபெற்றுச் சென்றுள்ளனர்.
அதேபோன்று விசேடமாக தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு அடிக்கடி பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொள்ள அங்கிருக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு சபாநாயகரை கேட்டுக் கொள்கிறேன்.
பாராளுமன்றத்தில் யாருக்காவது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுமாக இருந்தால் எங்களுக்கும் அது பாதிக்கும். அதனால் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பதிலளிக்கையில், நீங்கள் தெரிவிக்கும் விடயம் தொடர்பில் குறித்த பிரிவில் இருந்து எங்களுக்கு முறைப்பாடு கிடைத்ததில்லை. அது தொடர்பில் விசாரணை மேற்கொள்வோம் என்றார்.
No comments:
Post a Comment