ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராம மக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் ஆளுந்தரப்பு பராளுமன்ற உறுப்பினர்கள், உரிய அரச அதிகாரிகள் முன்னிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் ஆகிய கிராமங்கள் இதுவரை மீள் குடியமர்த்தப்படவில்லை.
தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்குத் தயாராக இருக்கின்றனர். குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு என்னிடமும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு அப்பகுதிகளிலிருந்த மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர். இருப்பினும் அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் இவ்வாறாகத் தம்மை தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேறவிடாமல் தடுத்து வைத்துக் கொண்டு, தமது பூர்வீக கிராமங்களில் வேறு குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா என்ற அச்சத்துடன் அப்பகுதிகளுக்குரிய மக்கள் காணப்படுகின்றனர்.
எனவே புதிய அரசாங்கமானது தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராம மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் கூடிக வனஞ்செலுத்த வேண்டும். அவர்களை மீள் குடியேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் பகுதிகளில் தமிழ் மக்கள் 1984ஆம் ஆண்டிற்கு முன்னர் குடியிருந்த பெருமளவான பகுதிகளை தொல்லியல் திணைக்களம், வன வளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பன கையகப்படுத்தி வைத்துள்ளதுடன், தண்ணிமுறிப்பில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர் மலையில் அடாத்தாக பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment