நீண்ட தூரத்திற்கான புதிய ரயில் சேவைகள் அறிமுகம் ! சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 25, 2025

நீண்ட தூரத்திற்கான புதிய ரயில் சேவைகள் அறிமுகம் ! சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் தீர்மானம்

சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காக பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக மலையக ரயில் பாதை ரயில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் ரயில் சேவைக்கான அதிக கேள்வி இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அதன்படி, பெப்ரவரி மாதம் முதல் எல்ல ஒடிஸி - கண்டி மற்றும் எல்ல ஒடிஸி - நானுஓயா ஆகிய இரண்டு புதிய ரயில்கள் சேவைகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், எல்ல ஒடிஸி - கொழும்பு ரயில் சேவையில் மேலதிக பயணத்தை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எல்ல - ஒடிஸி - கண்டி ரயில் சேவை, பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்கும் - தெமோதரவுக்கும் இடையில் இயக்கப்படுமெனவும் எல்ல ஒடிஸி - நானுஓயா ரயில் சேவை, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இயக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புக்கும் - பதுளைக்கும் இடையிலான எல்லா ஒடிஸி - கொழும்பு ரயில் சேவையில் மேலதிக ரயில் பயணத்தை பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்தும், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்தும் புறப்படும்.

மேலும், ஜனவரி 31ஆம் திகதி முதல் கொழும்புக்கும் – காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு நேர அஞ்சல் ரயில் சேவையும் தினசரி சேவையில் சேர்க்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment