2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கோரப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்துச் செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டமூலத்தின்படி, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் இரத்துச் செய்யக்கூடும்.
அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பாக வைப்பிலிடப்பட்ட கட்டுப்பணத்தையும் மீள செலுத்தவும் இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது.
அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் மேற்குறித்த திகதி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியிலிருந்து 03 மாத காலத்துக்கு இடைப்பட்ட நாளாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment