(இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை அறிக்கை, பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி ஏன் பின்வாங்குகிறார். கடந்த அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் குண்டுத் தாக்குதல் விவகாரத்தை தமது அரசியல் வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். நீதியை பெற்றுக் கொள்ள தொடர்ந்து போராடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம், சம கால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்று ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. குண்டுத் தாக்குதலின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்படவில்லை.
ஆட்சிக்கு வந்து 3 மாத காலத்தில் உண்மை சூத்திரதாரியை பகிரங்கப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். ஆனால் அவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் குண்டுத் தாக்குதல்கள் பற்றி பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளார். தனது ஆட்சியில் உண்மையை பகிரங்கப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்குமா என்பதை எதிர்பார்த்துள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஆகிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுள்ளன. இந்த அறிக்கையின் பரிந்துரைகளை முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் செயற்படுத்தவில்லை.
அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்தினால் தனக்கு இணக்கமானவர்கள் நெருக்கடிக்குள்ளாகுவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்தினாரே தவிர இவ்விடயத்தில் கரிசணை கொள்ளவில்லை.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்த பிரச்சினைகள் ஏதும் கிடையாது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை தாராளமாக நடைமுறைப்படுத்தலாம். இருப்பினும் அரசாங்கம் அது குறித்து கவனம் கொள்ளவில்லை.
குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பும் சந்தர்ப்பத்தில் கடந்த கால விசாரணைகளின் விபரங்களே குறிப்பிடப்படுகின்றன. புதிதாக எந்த தகவல்களும் குறிப்பிடப்படுவதில்லை.
கோட்டபய ராஜபக்ஷவை போன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் குண்டுத் தாக்குதல் விவகாரத்தை தனது வெற்றிக்கு பயன்படுத்திக் கொண்டார் என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கக்கூடாது.
30 வருட கால யுத்தத்த்தின் வடுக்கள் இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் உள்ளன அதேபோன்றுதான் குண்டுத் தாக்குதலின் பாதிப்பு இன்றும் எம் மத்தியில் உள்ளது.
தமது உறவுகள் ஏன் உயிரிழந்தனர் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்டு. ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு தொடர்ந்து போராடுவோம் என்றார்.
No comments:
Post a Comment