ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கான சீனாவின் ஆதரவு தொடரும் - அமைச்சர் விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கான சீனாவின் ஆதரவு தொடரும் - அமைச்சர் விஜித ஹேரத்

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை சீனா தொடர்ந்து வழங்கி வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அரசாங்கம், அந்த ஒத்துழைப்பு எதிர்வரும் காலங்களிலும் தொடரும் எனத் தெரிவித்துள்ளது.

அத்தோடு 'ஒரே சீனக் கொள்கையின்' பிரகாரம் சீனாவின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டினை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அரங்குகளில் இலங்கை வெளிப்படுத்தும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று புதன்கிழமை (22) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் சீன விஜயமானது எதிர்வரும் காலத்தில் ஒரு நாடு என்ற ரீதியில் இலங்கை முன்னேற்றகரமான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்திய மிக முக்கிய விஜயமாக அமைந்ததாகவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குரிய பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும், 15 இரு தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு உலகளாவிய ரீதியில் நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு சீனா போன்ற மிகப்பெரும் பலம் பொருந்திய நாட்டின் ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், இவ்விஜயத்தின்போது சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிடம் இருந்து அதற்கான உத்தரவாதம் கிட்டியமை தாம் பெற்ற வெற்றியாகும் எனத் தெரிவித்தார்.

அதேபோன்று, 'சீன ஜனாதிபதி சி ஜின்பிங்குடனான சந்திப்பின்போது 'ஒரே சீனக் கொள்கையை' நாம் ஆதரிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து பேணுவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தோம்' எனவும் அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

அதேவேளை சீனாவில் ஏதேனும் பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெறின், அதற்கு எதிராக இலங்கை உடன்நிற்கும் எனவும், இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் சீனாவுக்கு எதிரான எந்தவொரு பிரிவினைவாத செயற்பாடுகளும் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தாம் சீன ஜனாதிபதியிடம் உத்தரவாதமளித்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை சீனா தொடர்ந்து வழங்கி வந்திருப்பதாகத் தெரிவித்த அவர், அந்த ஒத்துழைப்பு எதிர்வரும் காலங்களிலும் தொடரும் என்றார்.

அத்தோடு சீனாவின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டினை, ஒரே சீனாவுக்கான ஆதரவினையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அரங்குகளில் இலங்கை வெளிப்படுத்தும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

இதன்போது 'எதிர்வரும் காலத்தில் சீனா தாய்வானுக்கு எதிராக ஆக்கிரமிப்பில் ஈடுபடும் பட்சத்தில், அதனையும் இலங்கை ஆதரிக்குமா?' என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விஜித ஹேரத், 'தாய்வான் என்பது சீனாவின் ஒரு பகுதி என்பதால், தாய்வானை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் சீனாவுக்கு இல்லை. சீனாவின் ஓரங்கமே தாய்வான் என்பதை எமது அரசாங்கம் மாத்திரமன்றி, முன்னைய அரசாங்கங்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் அக்கொள்கையை மாற்றமின்றித் தொடர்வோம்' என்றார்.

No comments:

Post a Comment