சின்னாபின்னமாகிப்போன நாட்டு நிர்வாகத்தையும், பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப நாம் விரும்பியோ, விரும்பாமலோ சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது என்று விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், தோல்வியின் எல்லையில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுவது தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சவாலாகாது.
பூச்சியத்துடன் மேலும் ஒரு பூச்சியம் சேர்ந்தால் அதுவும் பூச்சியம்தான். எனவே, தோல்வி அடைந்தவர்கள் பலர் ஒன்றிணைந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லாம் ஒன்றுதான்.
நீதிமன்ற உத்தரவொன்று இருப்பதன் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் காலதாமதமின்றி நடத்தப்படும். மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் நடக்கவிருக்கும் மேற்படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் எமக்கு இலகுவான வெற்றியைத் தரும்.
இதுவரை அரசு மேற்கொண்டுவரும் செயற்றிட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் ஒன்றிணைவது நல்லது. ஏனென்றால், அவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் தோல்வியடைந்த பிறகு அவர்களுக்கு கூறுவதற்கு எந்தக் காரணமும் இருக்காது. தாம் பிரிந்து போட்டியிட்டதால்தான் தோல்வியடைந்தோம் என்ற போலிக் காரணம் இத்துடன் முடிந்துவிடும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மையமாக வைத்து எமக்கு மேற்கொள்ள வேண்டிய எந்த பணியும் கிடையாது. ஏனென்றால், நாம் தற்போது மேற்கொள்ளும் பணிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளித்து வருகின்றனர். எனவே, புதிதாக எதையும் மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
அரிசிப் பிரச்சினை பற்றி பிரசாரம் செய்யுமளவுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. கண்டி மாவட்டத்தில் அரிசி தொடர்பாக எதுவித பிரச்சினையோ முறைப்பாடோ இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
சின்னாபின்னமான நாட்டை கட்டியெழுப்புவதற்கு விரும்பியோ விரும்பாமலோ நாம் சில தீர்மானங்களை எடுக்க வேண்டிவரும். சில உற்பத்திகளுக்கான வரிகள் அதிகரிக்க காரணமும் அதுவேயாகும். நாட்டு மக்களின் எதிர்காலம் குறித்து அவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment