எதிர்வரும் ஏப்ரல் மாதம் 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படலாம். எந்த வகையிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை பிற்போட முடியாது. சகல தரப்பினரதும் இணக்கத்தின்படி, நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக நாம் நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு ஒன்றைப் பெற்றுள்ளோம்.
தற்போது கோரப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்து செய்துவிட்டு மீண்டும் கோரப்படுதல் வேண்டும். அப்படிச் செய்வதன் ஊடாக இளம் வாக்காளர்கள் 4 இலட்சம் பேருக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கிறது. அதேவேளை ஏற்கனவே கோரப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்யக்கூடாது என்று உத்தரவிடும்படி, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் உரிமையும் எமக்குண்டு.
ஆறு வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சித் தேர்தல் பின்தள்ளப்பட்டு வந்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு உண்டு. ஒரு தேர்தலுக்கு சுமார் 100 பில்லியன் ரூபா அரசுக்கு செலவாகிறது. இவை பொதுமக்களது வரிப்பணமாகும்.
கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சகல தரப்பினரும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியதால் அது வெற்றிகரமாக முடிந்தது. எல்லோரது பங்களிப்பும் கிடைத்தது.
அந்த வகையில் ஐரோப்பிய சங்கம், இலங்கை தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும் நாட்டின் தேர்தல் தொழிற்பாடுகள் தொடர்பாக பாராட்டு தெரிவித்துள்ளது.
அடுத்து நடக்கப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஊனமுற்றவர்களது வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட அவர்கள் இலகுவான முறையில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment