கடந்த ஆட்சியில் பார்வையிழந்த 17 பேருக்கு இழப்பீடு : இறக்குமதியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

கடந்த ஆட்சியில் பார்வையிழந்த 17 பேருக்கு இழப்பீடு : இறக்குமதியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திர சிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்தார்.

“நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்கள் பார்வையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் பார்வையிழந்த 17 நோயாளர்களுக்கு அரசினால் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பத்திற்கு இதுபோன்று இழப்பீடு வழங்குவது இதற்கு முன் நடந்ததில்லை. எனவே, நாங்கள் இப்போது இழப்பீட்டு முறையைத் தயாரித்து வருகிறோம்.

அது மாத்திரமன்றி, இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எனவே, இது குறித்து ஒவ்வொன்றாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறோம்” என்றார்.

No comments:

Post a Comment