வீடுகளிலிருந்து வரி செலுத்த முடியுமான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் : கடந்த அரசின் சில பாவங்களை விரும்பாவிட்டாலும் நாங்களும் சுமக்க வேண்டியுள்ளது - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

வீடுகளிலிருந்து வரி செலுத்த முடியுமான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் : கடந்த அரசின் சில பாவங்களை விரும்பாவிட்டாலும் நாங்களும் சுமக்க வேண்டியுள்ளது - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மக்கள் செலுத்தும் வரி பணத்தினால் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தொழிற்சாலைகள் மற்றும் வரி செலுத்தும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் சுயமாக வரி செலுத்த முன்வருகிறார்கள். அத்துடன் எதிர்காலத்தில் வீடுகளில் இருந்து வரி செலுத்த முடியுமான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதி கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்கள் செலுத்தும் வரி பணத்தை பாதுகாத்து அதன் மூலம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். எமது வேலைத்திட்டத்தை தொழிற்சாலை உரிமையாளர்கள் வரி செலுத்தும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதனால் வரி செலுத்துவோர் மிகவும் ஆர்வத்துடன் சுயமாக செலுத்தி வருகின்றனர்.

வரி செலுத்தாதவர்கள் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு இறுதி திகதி ஒன்றை நாங்கள் அறிமுகப்படுத்தி இருந்தோம். அந்த காலப்பகுதியில் வரி செலுத்துவதற்கு மக்கள் வரிசையில் இருந்துள்ளார்.

மக்கள் வரி செலுத்த தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் செலுத்தும் வரி பணத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் என்ன என்பது தொடர்பில் அவர்களுக்கு தெரியாமல் இருந்தது. அதனால் வரி செலுத்துவோர் அதனை செலுத்துவதை தவிர்த்து வந்தார்கள்.

ஆனால் தற்போது மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வரி பணத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த வரி செலுத்தும் நடவடிக்கையை மேலும் இலகுபடுத்துவதற்காக வரி செலுத்துவோர் தங்களின் வீடுகளில் இருந்தவாரே இதனை மேற்கொள்ள தேவையான வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம்.

மேலும் மக்களின் வரி பணத்தை பாரியளவில் நாங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பான ஜனாதிபதியின் பதவி ஏற்கும் நிகழ்வு, அமைச்சர்களின் பதவி ஏற்கும் நிகழ்வு மிகவும் எளிமையாகவே இடம்பெற்றது. இதுவே கடந்த அரசாங்கமாக இருந்தால், மக்களின் வரி பணத்தை இதற்காக பாரியளவில் செலவழித்திருப்பார்கள்.

அதேபோன்று அமைச்சுக்களின் அதிகமான நிறுவனங்கள் வாடகை கட்டிடங்களிலேயே இருந்துள்ளன. அதற்காக பாரியளவில் வாடகை செலுத்தப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக எனது அமைச்சுக்கு கீழ் இருக்கும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மாத வாடகையாக 50 இலட்சம் வழங்கி வந்துள்ளது. அதனால் வாடகை கட்டிடங்களில் இருக்கும் அனைத்து அமைச்சுக்களின் நிறுவனங்களையும் அரச கட்டிடங்களின் கீழ் கொண்டுவர நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் பாரியளவில் மக்களின் வரி பணத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் சார்ள்ஸ் என்ட் டிபல் சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணிகளுக்கு பாரியளவில் கட்டணம் செலுத்துவதாக எங்களை கேள்வி கேட்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் சட்டத்தரணிகளாக சார்ள்ஸ் என்ட் டிபல் சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணிகளாக இணைத்துக் கொண்டது நாங்கள் அல்ல. ஆனால் அந்த நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்துவதற்கு சட்ட ரீதியில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

நாட்டை வங்குராேத்து நிலைக்கு தள்ளியிருக்காவிட்டால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தேவையில்லை. இந்த சட்டத்தரணிகளுக்கு கட்டணம் செலுத்துவதற்கு தேவையும் இருந்திருக்காது. அதனால் கடந்த அரசாங்கம் செய்த சில பாவங்களை விரும்பாவிட்டாலும் நாங்களும் சுமக்க வேண்டி இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment