(இராஜதுரை ஹஷான்)
பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன தொடர்பில் அவசியமான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தான் வலுவாக நம்புவதாக தெரிவித்துள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தாம் பெரும்பான்மை ஆணையை பெற்றிருப்பதை காரணம் காட்டி தன்னிச்சையாக செயற்பட மாட்டோம் எனவும், சகல தரப்பினரதும் ஆலோசனைகளை பெற்று முன்னகர்வோம் எனவும் குறிப்பிட்டார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 'சர்வஜன நீதி' அமைப்பினால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பலஸ்தீனத்துக்கும், இலங்கைக்கும் இடையில் நீண்டகால நல்லுறவு காணப்படுகிறது. ஆகவே பலஸ்தீன விவகாரத்தில் உணர்வுபூர்வமாகவே செயற்படுவோம். நாடு என்ற ரீதியில் பலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுப்போம்.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன இயங்கு நிலையில் உள்ளன. இருப்பினும் இங்கே கூறப்பட்டதை போன்று பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதை ஏற்றுக் கொள்கிறேன்.
2019 ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷ ஒரு இனவாத அலையுடனேயே ஆட்சிக்கு வந்தார். எனவே அப்போது இக்கட்டமைப்புக்கள் உரிய முறையில் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தேவைப்பாடு அவ்வரசுக்கு இருந்ததா ? என்பது தெரியவில்லை.
இப்போது இக்கட்டமைப்புக்கள் மீதான நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது. நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம் அக்கட்டமைப்புக்களின் வெளிப்படைத்தன்மை, செயற்திறன் என்பவற்றையும் உறுதிப்படுத்த முடியும்.
அடுத்ததாக சட்ட உருவாக்கம் மற்றும் சட்ட நடைமுறைப்படுத்தல் ஆகிய இரு முக்கிய விடயங்கள் உள்ளன.
அதேபோன்று சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் அதேநேரம் மக்களின் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன தொடர்பில் அவசியமான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் வலுவாக நம்புகிறேன்.
அதேவேளை இச்சட்ட உருவாக்கங்களின்போது எமது அரசாங்கம் தொடக்கத்தில் இருந்து செயற்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் ஏற்கெனவே பல்வேறு சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றை முன்னகர்த்த வேண்டும்.
மேலும், எமது அரசாங்கம் பெரும்பான்மை மக்களாணையை பெற்றுள்ளது. அதன் அர்த்தம் நாம் எதேர்ச்சதிகரமாக, தன்னிச்சையாக செயற்பட முடியும் என்பதல்ல, மாறாக எமது அரசாங்கம் முன்னெடுக்கும் முக்கிய நகர்வுகளில் நாம் சகல சம்பந்தப்பட்ட தரப்பினரதும், கருத்துக்களை கேட்டறிந்தே செயற்படுவோம் என்றார்.
No comments:
Post a Comment