ரணில் சகாக்களிடமிருந்து 7 பில்லியன் ரூபா வரிப் பணத்தை வசூலிக்க நடவடிக்கை : பார்களை உருவாக்கும் நேரத்தில் தென்னை மரங்களை நட்டிருக்கலாம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

ரணில் சகாக்களிடமிருந்து 7 பில்லியன் ரூபா வரிப் பணத்தை வசூலிக்க நடவடிக்கை : பார்களை உருவாக்கும் நேரத்தில் தென்னை மரங்களை நட்டிருக்கலாம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

(எம்.மனோசித்ரா)

மக்களின் வரிப் பணத்தில் ஓய்வு காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கியமை தொடர்பில் நையாண்டிக் கருத்தினை வெளியிடுவது பொறுத்தமற்றது. அவரது சகாக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களால் நடத்திச் செல்லப்பட்ட மதுபானசாலைகளால் வழங்கப்படவுள்ள 7 பில்லியன் ரூபா வரிப் பணத்தை வசூலிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றபோது அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மதுபானசாலை அனுமதிப்பத்திரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், வருடத்துக்கு 250 - 300 அனுமதிப்பத்திரங்களை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வரி வருமானத்தின் ஊடாக வர்த்தகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். 

நாட்டு மக்களின் வரிப் பணத்தில் தனது ஓய்வு காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இவ்வாறு நையாண்டிக் கருத்தினை வெளியிடுவது பொறுத்தமற்றது. மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்குவது சாதாரண விடயமல்ல. 

இவ்வாறு அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம் மக்களால் கொள்வனவு செய்யப்பட்ட மதுபான போத்தல்களால் கிடைக்கப் பெற்ற வரிப் பணத்தை சேமிப்பதற்கும் இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுபான போத்தல்களை விற்பனை செய்தமையால் மதுபானசாலை உரிமையாளர்கள் பெற்றுக் கொண்ட வருமானத்துக்கான வரி சுங்கத் திணைக்களத்துக்கு வழங்கப்படவில்லை. 

உதாரணமாக அலோசியசுக்கு சொந்தமான 3 நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டு முதல் வரி செலுத்தவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தபோது, தனது சகாக்களால் இதுவரை காலமும் செலுத்தப்படாமலிருந்த வரியை சேகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அதேபோன்று அவரது அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்த அமைச்சர்களால் நிர்வகித்துச் செல்லப்பட்ட மதுபானசாலைகளிலிருந்து 7 பில்லியன் ரூபா வரை வரி செலுத்தப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு இதுவரை செலுத்தப்படாமலுள்ள வரியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையே நாம் முன்னெடுத்திருக்கின்றோம். அலோசியசுக்கு சொந்தமான 3 நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

செலுத்தப்படாமலுள்ள வரித் தொகைக்கு பதிலாக அவர்களது சொத்துக்களை சுவீகரிப்பதற்கு சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் அதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும்.  ஆனால் துரதிஷ்டவசமாக அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் மாத்திரமே சட்டத்தில் காணப்படுகின்றன. 

மேலும் நிறுவனங்களின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளன. தேவையேற்படின் அவற்றுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதிப்பத்திரங்களை வழங்கி மதுபானசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில், தென்னை வளர்ப்பினை ஊக்குவித்திருந்தால் அல்லது அதற்கு வழங்கிய முக்கியத்துவத்தை நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு வழங்கியிருந்தால் இப்போது அவற்றுக்கு தட்டுப்பாடு இருந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment