திருகோணமலையிலுள்ள ஒலிபரப்பு நிலையம் பயன்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியது - இம்ரான் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 24, 2024

திருகோணமலையிலுள்ள ஒலிபரப்பு நிலையம் பயன்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியது - இம்ரான் எம்.பி

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பெறுமதி மிக்க வளம் முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

திருகோணமலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள உப ஒலிபரப்பு நிலையம் தொடர்பாக இன்று (24) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், கும்புறுபிட்டியில் அமைந்துள்ள உப ஒலிபரப்பு நிலையம் முன்னர் ஜேர்மன் வானொலிக்கு சொந்தமாக இருந்தது. தற்போது அது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உப நிலையமாக செயற்படுகின்றது.

தற்போது இந்த வானொலி உப ஒலிபரப்பு நிலையத்தினூடாக உள்ளுர் நிகழ்ச்சிகள் எதுவும் ஒலிபரப்பப்படுவதில்லை. வெளிநாட்டு ஒலிபரப்பு ஒன்றுக்காக மட்டும் இந்த நிலையம் பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் மாலை வேளையில் மட்டும் இந்த ஒலிபரப்பு இடம்பெறுகின்றது. இதற்காக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் வாடகை பெறப்படுகின்றது. ஏனைய நேரங்களில் இந்த நிலையம் எவ்வித செயற்பாடும் இன்றி இருக்கின்றது.

இம்மாவட்டத்தில் உள்ள பெறுமதி மிக்க வளம் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியது.

எனவே, இந்த ஒலிபரப்பு நிலையம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இப்பகுதி கலை பண்பாட்டு நிகழ்வுகளை ஒலிபரப்ப முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். உள்ளுர் செய்திகள் ஒலிபரப்ப வாய்ப்புகள் வழங்கப்படலாம். அறிவு சார்ந்த நிகழ்வுகள், மாணவர் நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு முக்கியத்தவம் கொடுக்கப்படலாம்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் இந்த ஒலிபரப்பு நிலையம் பிரபலமடைந்து விளம்பரங்கள் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். குறிப்பிட்டளவு வேலைவாய்ப்பையும் உருவாக்கலாம்.

எனவே, இப்பகுதி முக்கியஸ்தர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமித்து பரிந்துரைகளைப் பெற்று இதனை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

இது தொடர்பான கோரிக்கையை நமது இந்த அபிவிருத்திக்குழு ஊடகத்துறை அமைச்சருக்கு முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்

No comments:

Post a Comment