மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் என்பது அதிகாரிகளை அச்சுறுத்துவதல்ல - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2024

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் என்பது அதிகாரிகளை அச்சுறுத்துவதல்ல - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை. ஊழலற்ற ஆட்சி. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தலைமை உரை ஆற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை. ஊழல் அற்ற ஆட்சியில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் என்பது அதிகாரிகளை அச்சுறுத்துவதல்ல. மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதாகும். இதற்கு அனைவரது ஒத்துளைப்புகளும் தேவை. அரசியல்வாதிகளால் மட்டும் இதனை செய்ய முடியாது. அரச அதிகாரிகளது ஒத்துழைப்பு பங்களிப்பு அவசியம்.

கடந்த காலங்களில் அரசியல் தலையிடு இருந்தமையால் வினைத்திறனாக செயற்படாதிருந்தமை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இனி அவ்வாறு தலையீடுகள் கிடையாது. சுதந்திரமாக செயல்பட்டு மாவட்டத்தை, நாட்டை முன்னேற்ற வேண்டும்.

தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். இந்த ஆணை என்பது இதுவரை காலமும் இடம்பெற்ற ஊழல் ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராகவே இந்த மாற்றம் ஏற்பட்டது.

மேலும் இந்த அரசாங்கம் கிராமங்களை நோக்கியே வேலைத்திட்டங்களை செயல்படவுள்ளது. எனவே கடந்த காலங்களைபோல் அல்லாமல் மக்களுக்கு உண்மையுடனும் விசுவாசத்துடனும் சேவையாற்ற வேண்டும்“ என்றார்.

No comments:

Post a Comment