(எம்.மனோசித்ரா)
பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப்பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படை தளபதிகளின் சேவை நீடிப்புக் காலம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. எனினும் அவர்களது சேவையை மீண்டும் நீடிப்பது குறித்தோ அல்லது புதிய நியமனங்களை வழங்குவது குறித்தோ பாதுகாப்பு அமைச்சர் ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இதுவரை எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.
பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப்பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலம் கடந்த ஜூன் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி வரை ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளதியாக பணியாற்றினார்.
அதன் பின்னர் தனது பதவிக் காலம் நிறைவடைய 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி பாதுகாப்பு படைகளின் பதவிநிலை பிரதானியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவரது பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 இல் பிறந்து 60 வயதைக் கடந்துள்ள ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவியேற்கும் முன்னரே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய சேவை நீடிப்பின் அடிப்படையில் இராணுவத்தில் பணியாற்றினார்.
இதேவேளை சேவை நீடிப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் 57 வயது பூர்த்தியாகிறது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும், சேவை நீடிப்பின் அடிப்படையில் பணியாற்றி வருகிறார். அவர் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி பதவியேற்றுக் கொண்டார்.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவும் சேவை நீடிப்பில் உள்ளார். அவருக்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதியன்று 56 வயது பூர்த்தியாகிறது.
பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவிக்கு, ஓய்வு பெறப்போகும் இராணுவ, விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதி ஒருவர் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment