தமிழ் நாட்டு மீனவர்களுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காண அநுரகுமார திஸ்ஸநாயகவின் புதிய அரசு தயாராக உள்ளதென இலங்கை கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இந்திய ஒன்றிய அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரிடம் நேற்று (14) கடிதம் அளித்து வலியுறுத்தினார்.
இலங்கை கடற்படையால் தமிழ் நாட்டு மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 230 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 530 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வலைகளும் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு அவற்றை ஏலம் விட்டு தமது கருவூலத்தில் இலங்கை அரசு சேர்த்துக் கொள்கிறது. பல மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குஜராத், ஒடிஷா மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய அரசு தமிழ் நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படும்போது மெத்தனமாக உள்ளது. என்பதை அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியிருப்பதோடு பின்வரும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன:
1. இரட்டைமடி, சுருக்குமடி வலை பிரச்சினைக்கு தீர்வு காண்க
இழுவைப் படகு மூலம் இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் பிரச்சினைக்கு பரஸ்பரம் ஒப்புக் கொள்ளக் கூடிய தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
2. வாழ்வாதார மாற்று வழிகள்
தினக்கூலிக்கு விசைப் படகுகளில் பணி புரியும் மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதார ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
3. கரையோரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்
வளைகுடாப் பகுதியை திறம்பட கண்காணிக்க கடலோர காவல் படைக்குப் போதுமான ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும்.
4. உடனடி செயட்ற்றிடம்
இலங்கை அதிபரின் இந்திய வருகைக்கு முன் அனைத்து தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment