பல முக்கிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், திறன் இன்மை மற்றும் தவறான முகாமை காரணமாக சுமார் 1.44 பில்லியன் ரூபா இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த அண்மைய தேசிய கணக்காய்வறிக்கை இந்த விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரகாரம், தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த கணக்காய்வு அண்மையில் நிறைவுக்கு வந்துள்ளது.
அதன் அடிப்படையில் 38 நகர்ப்புற மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் பொது, உள்நாட்டு பாடசாலை சுகாதாரத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
அத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்ட கால அளவிலிருந்து ஏழு மடங்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுமானத்துறையில் ஒப்பந்ததாரர்களை முன்னகர்த்திச் செல்வதற்கு அரசாங்கத்தால் பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், 330 முதல் 2,158 நாட்கள் வரையிலான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சால் செயற்படுத்தப்பட்ட, முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களாக இவை காணப்படுகின்றன.
குறித்த திட்டங்கள் நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் சுகாதாரத் திட்டங்களின் விரிவாக்கம், தேசிய சமூக நீர் வழங்கல் துறையின் திறன் மேம்பாடு, துறை பயிற்சி, நீர் தர அடையாளம், முகாமை ஆகிய நான்க கூறுகளாக காணப்படுகின்றன.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 183.90 மில்லியன் டொலர்கள் (27,590 மில்லியன் ரூபா) ஆகும், இதில் 165 மில்லியன் டொலர்கள் (24,750 மில்லியன் ரூபா) சர்வதேச அபிவிருத்தி சங்கத்தால் நிதியளிக்கப்படுகிறது, மீதமுள்ள 2,840 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்தாலும் சமூக அமைப்புக்களின் பங்களிப்புகளாலும் ஈடுசெய்யப்படுகின்றது.
குறித்த திட்டமானது 2015 டிசம்பர் 7ஆம் திகதியன்று தொடங்கப்பட்டது, ஆரம்பத்தில் 2020 டிசம்பர் 31 ஆம் திகதியன்று முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் 2023 டிசம்பர் 31, வரை ஒப்பந்தக்காரர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திட்டங்களில் கோட்டியாகுமபுர மணல் வடிகட்டி தொட்டி பிரதானமானதாகும், அங்கு தொட்டிகள் பயன்படுத்தப்படாததால் 1.7 மில்லியன் ரூபா முதலீடு பயனற்ற நிலையில் உள்ளது.
இதேபோல், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தில் முறையற்ற திட்ட துணைப்பிரிவுக்காக 599 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது, இது அரசாங்க கொள்முதல் வழிகாட்டுதல்களை மீறியது மற்றும் திட்ட காலக்கெடுவில் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று முழலங்காவில் நீர் வழங்கல் திட்டத்தில், கூடுதல் பணிச் செயற்பாடுகள் மற்றும் திட்ட முன்னெடுப்பு நோக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, செலவில் 267 மில்லியன் ரூபா மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களுக்கு சமூக பங்களிப்புகளில் 551 மில்லியன் ரூபா வசூலிப்பதற்கு தவறவிடப்பட்டுள்ளதால் நிதியில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.
ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு மாறாக, கிளிநொச்சி மாவட்ட திட்டங்களுக்கான துணை ஒப்பந்ததாரர்களுக்கு 19 மில்லியன் ரூபா நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய பிரச்சிகைளால் மொத்தமாக 1,437.7 மில்லியன் (தோராயமாக 1.44 பில்லியன் ரூபா) நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகும்.
இந்த தாமதங்கள் மற்றும் திறமையின்மைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கணக்காய்வு அறிக்கையில் அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments:
Post a Comment