முறையான விசாரணைகளை மேற்கொண்டு நிதியை மீளப் பெற வேண்டும் - எஸ்.பி. திசாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 24, 2024

முறையான விசாரணைகளை மேற்கொண்டு நிதியை மீளப் பெற வேண்டும் - எஸ்.பி. திசாநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கோடிக் கணக்கில் நிதி பெற்றுள்ளமை முறையற்றதொரு செயற்பாடாகும். முறையான விசாரணைகளை மேற்கொண்டு நிதியை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2005 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்டவர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. உண்மையில் ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக 1 முதல் 10 இலட்சம் ரூபா வரையிலான நிதியை ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இலங்கையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான சாத்தியம் காணப்பட்ட போதிலும் ஒரு சிலர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பல கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் நலன் கருதியே 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பல கோடி ரூபா கணக்கில் நிதி பெற்றுக் கொண்டுள்ளமை முற்றிலும் முறையற்றதொரு செயற்பாடாகும்.

ஒரு சில அரசியல்வாதிகளின் தவறான செயற்பாடுகளினால் ஒட்டு மொத்த அரசியல்வாதிகளின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்றுக் கொண்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு அந்த நிதியை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment