(இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்ட விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடிபணிந்துள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தில் இருந்து விலகுவதாக வழங்கிய வாக்குறுதி தொடர்பில் மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளுக்கும், நடைமுறை நிர்வாகத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. கடந்த கால அரசாங்கங்களின் நிர்வாகத்தை விமர்சித்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து விலகினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் என்று குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் அவர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான நீட்டிக்கப்பட்ட செயற்திட்ட விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடிபணிந்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் சகல நிபந்தனைகளுக்கும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் நிபந்தனைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
சர்வதேச நாணய நிதிய செயற்திட்டம் தொடர்பில் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் குறித்து நாட்டு மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும். பொருளாதார மீட்சிக்கான கொள்கைகளை முன்வைக்காமல் வெறும் வாக்குறுதிகளை மாத்திரம் முன்வைத்து ஆட்சிக்கு வந்தது. ஆகவே வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் நினைவுபடுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment