அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதுகாப்பேன் - சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 17, 2024

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதுகாப்பேன் - சபாநாயகர்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

சட்டவாக்கத்துறையின் கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கிறேன். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதுகாப்பேன். பத்தாவது பாராளுமன்றம் இனம், மதம் என்ற வரையறைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் சகவாழ்வு மற்றும் மக்களின் அபிலாசைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. இதன்போது சபைக்கு விசேட அறிவிப்பை விடுத்த சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சபாநாயகர் மேலும் அறிவித்ததாவது, மேன்மை பொருந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகராக என்னை தெரிவு செய்தமைக்கும், வாழ்த்து தெரிவித்தமைக்கும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு கடந்த காலங்களை காட்டிலும் இந்த பாராளுமன்றத்துக்கு அதீத பொறுப்பு காணப்படுகிறது.

அரசியலமைப்பின் ஏற்பாடுகள், பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் முன்னாள் சபாநாயகர்களின் எடுத்துக்காட்டான செயற்பாடுகளுக்கு அமைய பக்கச்சார்பற்ற வகையில் நடுநிலையாக, செயற்படுவதுடன், சவால்மிக்க பொறுப்புக்கள் சபாநாயகர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவேன்.

சட்டவாக்கத்துறையின் கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கிறேன். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதுகாப்பேன் என்று வாக்குறுதியளிக்கிறேன்.

பத்தாவது பாராளுமன்றம் இனம், மதம் என்ற வரையறைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் சகவாழ்வு மற்றும் மக்களின் அபிலாசைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும். இதற்கு சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment