யாழ். மாவட்டத்தில் இதுவரை 99 பேருக்கு எலிக் காய்ச்சல் : கால்நடைகளில் இருந்து பரவுகின்றதா? - கொழும்பில் இருந்து செல்கிறது விசேட குழு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 17, 2024

யாழ். மாவட்டத்தில் இதுவரை 99 பேருக்கு எலிக் காய்ச்சல் : கால்நடைகளில் இருந்து பரவுகின்றதா? - கொழும்பில் இருந்து செல்கிறது விசேட குழு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும், யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (17) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும், யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலே எலிக் காய்ச்சலை பரப்புகின்ற பற்றீரியா அந்த பிரதேசங்களில் இருக்கின்ற கால்நடைகளில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனவே அதனை உறுதிப்படுத்துமாறு நாங்கள் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் அனுமதி கோரியிருந்தோம். அதனடிப்படையில் நாளை கொழும்பில் இருந்து கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஒரு விசேட குழுவினர் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள்.

அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற கால்நடைகளின் குருதி மாதிரிகளை பெற்று கொழும்புக்கு கொண்டு சென்று ஆய்வு செய்து, கால்நடைகளில் கிருமித் தொற்று இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்த இருக்கின்றார்கள்.

99 நோயாளர்களில் இதுவரை 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எவரும் இந்த நோயால் பாதிக்கப்படவில்லை.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆண்கள் மருத்துவ விடுதியில் எங்களுக்கு ஒரு நெருக்கடியான நிலை காணப்பட்டது. அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதற்காக நாங்கள் தனியான விடுதி ஒன்றையும் நாங்கள் 16 ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளோம்.

எலிக் காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்றுமுன்தினம் வரை ஏறத்தாழ 6000 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித் தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நாளை (இன்று) வருகை தரவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment