வடக்கு, கிழக்கு தனி நாட்டு கருத்தியலை நிராகரிக்கின்றோம் : பெருந்தோட்ட மக்களின் காணி, வீட்டுரிமை பெற்றுக் கொடுப்போம் - கிட்ணன் செல்வராஜ் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

வடக்கு, கிழக்கு தனி நாட்டு கருத்தியலை நிராகரிக்கின்றோம் : பெருந்தோட்ட மக்களின் காணி, வீட்டுரிமை பெற்றுக் கொடுப்போம் - கிட்ணன் செல்வராஜ்

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், அதனூடான தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒட்டு மொத்த மக்களின் நலனையும், வாழ்வியலையும் மேம்படுத்த தேசிய மக்கள் சக்தி கடமைப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் காணி உரிமையை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகைள முன்னெடுப்போம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பதுளை தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றியை பெற்றுக் கொடுத்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சியினர் காலம் கடந்த பல்லவியை மாத்திரம் பாடிக்கொண்டு விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.

எமது மலையக சமூகம் 200 ஆண்டு கால பின்னணியை கொண்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டிலும் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

உரிமைகள் மறுக்கப்பட்டு வெறும் சலுகை கோட்பாடுகளுக்குள் மாத்திரமே மலையக சமூகம் உள்வாங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் எம்மையும் இணைத்துக் கொண்டு அரசியல் உரிமைகளை வழங்கியுள்ளது.

200 வருட கால பின்னணியை கொண்டுள்ள நாங்கள் பல சவால்களை கடந்து வந்துள்ளோம். 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது.

மலையக பெருந்தோட்ட மக்கள் இடதுசாரி கொள்கையுடைன செஞ்சட்டை அமைப்பை ஆதரித்தனர். இதனைத் தொடர்ந்து பதுளை மாவட்டத்தில் இருந்து நடராஜா என்பவர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

பெருந்தோட்ட மக்கள் இடதுசாரி அமைப்பினை ஆதரிப்பதால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் குடியுரிமையை பறித்தது. இதன் பின்னர் மலையக மக்கள் நாட்டுக்குள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் இனவழிப்பை கட்டவிழ்த்து விட்டு பெருந்தோட்ட மக்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியது.

கலவரத்தின் பின்னர் ரெட்மானா தொண்டு நிறுவனத்தின் ஊடாக வன்னி, கிளிநொச்சி உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களுக்கு பெருந்தோட்ட மக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இதன் பின்னர் எமது மக்கள் ஈழவாத கருத்தியலுடன் ஒன்றிணைந்து 30 வருட கால போராட்டத்தில் போராளிகளானார்கள். ஆனால் தமிழ் பேரினவாத சிந்தனையுடையவர்கள். 30 வருட கால போர் வடக்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள்.

வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், அதனூடான தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒட்டு மொத்த மக்களின் நலனையும் , வாழ்வியலையும் மேம்படுத்த தேசிய மக்கள் சக்தி கடமைப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவற்றை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

எமது சமூகத்துக்கான காணி உரிமையை வழங்க வேண்டும். 1946 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் காணி அமைச்சராக பதவி வகித்த டி.எஸ். சேனாநாயக்க விசேட சட்டத்தை கொண்டு வந்தார். இந்திய வம்சாவளியுடைய பெருந்தோட்ட மக்கள் வந்தேறு குடிகள் அவர்களுக்கு இந்த நாட்டில் காணி உரிமை வழங்கக்கூடாது என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் எதிரொலியாக மேல் மாகாணத்தில் உருளவெல்லி தோட்டத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து முழு மலையக பகுதிகளிலும் 21 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றது.

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும் என்பது பிரதான கோசமாக காணப்பட்டது. காணி உரிமைக்காக மலையக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிவனு லட்சுமணன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆகவே இந்த இளைஞனின் கனவை நனவாக்குவது தேசிய மக்கள் சக்தியாக எமது கடமையாகும். காணி மற்றும் வீட்டுரிமையை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment