தரம் 5 புலமைப்பரிசில் வினாக்களுக்கு புள்ளி வழங்குவது உரிமை மீறல் : நிபுணர் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2024

தரம் 5 புலமைப்பரிசில் வினாக்களுக்கு புள்ளி வழங்குவது உரிமை மீறல் : நிபுணர் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தவும்

அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் கசிந்ததாக தெரிவிக்கப்படும் 3 கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட மூன்று பரிந்துரைகளில் பொருத்தமான பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளின் ii இன் மூன்று கேள்விகளை கசியவிடுவதற்கு உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர்களுக்கு நீதிபதிகள் குழாமினால் அபராதம் விதிக்கப்பட்டது.

இதன்படி, மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்கவிற்கு ரூ. 3 மில்லியனும், பாடசாலை ஆசிரியரான சமிந்த குமார இளங்கசிங்கவிற்கு ரூ. 2 மில்லியனும் அரசாங்கத்திற்கு அபராதமாக செலுத்துமாறு விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்த நான்கு மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் யசந்த கோதாகொட, குமுதுனி விக்ரமசிங்க, அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்ததாகக் கூறப்படும் மூன்று வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவின் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தீர்ப்பளித்திருந்தனர்.

தரம் 5 புலமைப்பரிசில் கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி இடம்பெற்றிருந்ததோடு, அதனைத் தொடர்ந்து குறித்த பரீட்சையில் வந்த 3 வினாக்கள் மாதிரி வினாக்களாக பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டமையும், அது பரீட்சைக்கு முதல் நாள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டமையும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பரீட்சையில் வினாத்தாள் ஒன்றின் மூன்று கேள்விகள் கசிந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி, பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. பின்னர், முதற்கட்ட விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டு விசாரணையையும் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த பரீட்சையின் மூன்று கேள்விகள் மட்டுமே முன்கூட்டியே கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், முழு வினாத்தாள் கசிந்ததாக பல சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் குழு, பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் போராட்டங்களை நடத்தியதால் இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் பின்னணியில், வினாத்தாள் விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர் ஒருவரும் ஒக்டோபர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 58 வயதான NIE பணிப்பாளர் 2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தயாரித்த குழுவில் அங்கம் வகித்தவர் என்பதோடு, 49 வயதான ஆசிரியர் தரம் 05 மாணவர்களுக்கு பிரத்தியோக வகுப்புகளை நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பெற்றோர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் முறையிட்டதையடுத்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு விசாரணை முடியும் வரை இடைநிறுத்தப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி அறிவித்தார். மேலும், கசிந்ததாகக் கூறப்படும் 03 வினாக்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை கடந்த நவம்பரில் உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

No comments:

Post a Comment