தரமற்ற மருந்துகளுக்கு அமைச்சரவை பொறுப்பாகாது : CID யில் வாக்குமூலம் வழங்க வந்த ஹரின் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 22, 2024

தரமற்ற மருந்துகளுக்கு அமைச்சரவை பொறுப்பாகாது : CID யில் வாக்குமூலம் வழங்க வந்த ஹரின் தெரிவிப்பு

சர்ச்சைக்குரிய தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவத்திற்கு அப்போதைய அமைச்சரவை பொறுப்பாகமாட்டாது என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்தார்.

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்கு இன்று (22) வந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கியமை தொடர்பில் அப்போதைய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எதிர்வரும் 11ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிவித்தது.

அதற்கமைய, தரமற்ற தடுப்புசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவு 01 இல் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெனாண்டோ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரின் பெர்னாண்டோவைத் தவிர ஏனைய குழுவினர் நேற்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்து வாக்குமூலங்களை வழங்கியதுடன், ஹரின் பெனாண்டோ இன்று ஆஜராகியிருந்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஹரின் பெனாண்டோ, குறித்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவத்திற்கு அப்போதைய அமைச்சரவை பொறுப்பாகாது என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். 

காரணம், அமைச்சரவையில் ஒரு நாளைக்கு குறைந்தது 60, 70 ஆவணங்கள் கொண்டுவரப்படுகின்றன. பொதுவாக அந்த அமைச்சுகளின் செயலாளர்கள் அவற்றைத் தயாரித்து சமர்ப்பிப்பார்கள். அமைச்சர் அதை அமைச்சரவையில் சமர்ப்பிக்கிறார். சமர்ப்பித்தவுடன் நிதி அமைச்சு அதற்கு பரிந்துரை வழங்குகின்றது. 

எனவே இவ்வாறு குற்றம் சுமத்துவது இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். ஆனால் நாம் நீதிமன்ற உத்தரவிற்கு கௌரவமளித்து எமக்குத் தெரிந்தவற்றை கூற எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment