வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களில் இருவர் ஜனாஸாக்களாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 26, 2024

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களில் இருவர் ஜனாஸாக்களாக மீட்பு

பாறுக் ஷிஹான்

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன், வெள்ளத்தினால் அடித்துc செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது. தற்போது மீட்கப்பட்ட ஜனாசாக்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி, சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில், அதில் பயணம் செய்தவர்கள் வெள்ளநீரில் அள்ளுண்டு காணாமற்போயினர்.
கல்முனை பொதுமக்கள் மாளிகைக்காடு ஜனாஸா நலம்புரி அமைப்பினர் உட்பட கல்முனை கடற்படையினரின் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த மீட்புப்பணியின்போது அப்பகுதியிலுள்ள அதி வலு மின் கம்பத்தைப் பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும், இவ்விபத்தில் 06 சிறுவர்கள் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தற்போது காணாமற்போயுள்ளனர். எஞ்சிய நான்கு பேர் இன்னும் மீட்கப்படவில்லை. அத்துடன், நள்ளிரவு தாண்டியதன் காரணமாக மீட்புப்பணி இடைநடுவில் கைவிடப்பட்டது.

26.11.2024 அன்று நிந்தவூரிலிருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது. 
இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக்கல் லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் 06 பேர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர். 

இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

பின்னர் இன்று (27) காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நிந்தவூர் மதரஸாவிருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் காரணமாக விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காணாமற்போன மாணவர்களைத் தேடும் பணியில் பொலிஸாரும் அப்பகுதி மக்களும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment