நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜித ஹேரத், தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ், முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவது குறித்து தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் எனினும் அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக தனது கட்சி தமிழ், முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கும் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான இந்த அழைப்பு இந்த சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு (UNP) அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ், முஸ்லீம் சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவுள்ளோம், நாங்கள் ஏற்படுத்த விரும்பும் ஐக்கியத்தை இதன் மூலமே ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ள விஜித ஹேரத், தேசிய ஐக்கிய அரசாங்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தேசிய மக்கள் சக்தியால் வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடியும் அனைத்து சமூகங்களிற்காகவும் பணியாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வாரங்களில் தனது நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கான பிரச்சார உரைகளில் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என நம்புவதாகக் குறிப்பிட்டு, இது வலுவான, சக்தி வாய்ந்த அரசாங்கத்திற்கான நேரம், ஆனால் எதிர்க்கட்சிக்கான நேரம் அல்ல என்று கூறினார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் பிரபல்யம் குறைந்துள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி மீதான மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கடந்த வாரம் புதிய நாடாளுமன்றத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனுபவம் வாய்ந்தவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால், இரண்டு நாள் மௌன காலம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளது
No comments:
Post a Comment