(பாறுக் ஷிஹான்)
சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டுமென்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்க வேண்டும். வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும், ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டுமென சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
கபே அமைப்பின் “அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைக் குழுக்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்களைத் தெளிவூட்டும் நிகழ்வும் கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் காண்காணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் இன்று (11) கல்முனையிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் பின்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அவர், கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த தேர்தல் நிலவரமும் தற்போதிருக்கின்ற நிலவரத்தினையும் பார்க்கும்போது வன்முறையற்ற தேர்தல் கலாசாரம் உருவாகின்றது.
அதாவது, ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகளற்ற ஒரு சமாதானமான தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் ஒரு கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம். அதற்கு உதாரணமாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலைக் குறிப்பிடலாம்.
அதேபோல, இந்த பொதுத் தேர்தலிலும் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை.
இதேவேளை, பிரசார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும்பங்கினை வழங்குகின்றது. இவற்றை நாம் கண்காணிக்கும்போது அபேட்சகர்களுக்கெதிரான சேறு பூசக்கூடிய, இழிவுபடுத்தக் கூடிய போலிப்பிரசாரங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பதனை அவதானிக்க முடிகின்றது.
சட்டவிரோத தேர்தல் பிரசாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகின்றது. இது தவிர, கடந்த காலத்தேர்தலில் காத்தான்குடிப் பிரதேசத்தில் பாடசாலைச் சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
கபே அமைப்பு தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்திலிருந்து 25 மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது
இதுவரை கபே அமைப்புக்கு பல்வேறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுகின்றமை தொடர்பாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அத்துடன், சமூக வலைத்தளங்களைப் பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரசாரங்களை வீடியோப் பதிவுகள் போலி முகநூல் மற்றும் வாட்சாப் ஊடாகவும் இடப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதைக் காணக்கூடியதாகவுள்ளது.
எனவே, அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநித்துவப்படுத்தக் கூடியவர்களை வரவழைத்து “அமைதியான தேர்தலுக்காக ஒத்துழைப்போம்” என்ற வகையில் சத்தியபிரமாணமொன்றைப் பெறுகின்றோம்.
எனவே, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டுமென்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்க வேண்டும். வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டுமென கபே அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
இருந்தபோதும், அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், பாராளுமன்ற, முன்னாள் மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் வேண்டிக் கொள்ளுவது இதுவரையான காலப்பகுதியில் பாரிய வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறாத நிலையில், தேர்தல் பிரசார நடவடிக்கையை எவ்வாறு ஈடுபட்டு வந்தீர்களோ அதேபோன்று, தேர்தல் தினத்திலும் அதனைத் தொடர்ந்து வரக்கூடிய 7 நாட்களுக்குப் பின்னரான காலப்பகுதிக்குள் சமாதானமான தேர்தலுக்காக ஒன்றுபட வேண்டுமென நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.
குறித்த கலந்துரையாடலில் கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன் உடன் கபே அமைப்பின் சட்டத்துறைப் பொறுப்பாளர் சட்டத்தரணி ஹரீன்தெர வனகள, மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் ஆகியோர் இணைந்திருந்தனர்.
No comments:
Post a Comment