நீரில் அடித்துச் சென்ற மாணவர்களைத் தேடும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர் - இதுவரை நால்வர் ஜனாஸாக்களாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 27, 2024

நீரில் அடித்துச் சென்ற மாணவர்களைத் தேடும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர் - இதுவரை நால்வர் ஜனாஸாக்களாக மீட்பு

(பாறுக் ஷிஹான்)

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை 04 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன், தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன. தற்போது வரை 04 ஜனாசாக்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லபட்டுள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது-16), அப்னான், பாறுக் முகமது நாஸிக் (வயது-15), சஹ்ரான் (வயது-15) ஆகியோரர் உள்ளடங்குவதுடன், தஸ்ரிப், யாசீன், ஆகிய மாணவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
மேலும், சம்மாந்துறை நீதிமன்ற பதில் எம்.ரி.சபீர் அகமட் அவர்களின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல்ஜவாஹிர் குறித்த சடலங்கள் மீதான மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமற்போன தஸ்ரிப் என்ற மாணவனின் பாடசாலை புத்தகப்பை மீட்புக்குழுவினரால் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று 26.11.2024ம் திகதி செவ்வாய்க்கிழமை நிந்தவூரிலிருந்து சம்மாந்துறை நோக்கி 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது.

இதன்போது, நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் 06 பேர் நீரில் மூழ்கி காணாமற் போயிருந்தனர். இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக்கொண்ட 12, 16 வயதுக்கிடைப்பட்டவர்களாவர்.
அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி, சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ளநீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில், அதில் பயணம் செய்தவர்கள் வெள்ளநீரில் அள்ளுண்டு காணாமற் போயினர்.

குறித்த மீட்புப்பணியில் போது, அப்பகுதியிலுள்ள அதிவலு மின்கம்பத்தைப் பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும், இவ்விபத்தில் 06 சிறுவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு தற்போது காணாமற்போயுள்ளனர். எஞ்சிய நான்கு பேர் இன்னும் மீட்கப்படவில்லை. அத்துடன், நள்ளிரவு தாண்டியதன் காரணமாக மீட்புப்பணி இடைநடுவில் கைவிடப்பட்டது.

இன்று (27) காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நிந்தவூர் மதரஸாவிருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் காரணமாக விபத்துக்குள்ளானதாக தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காணாமற்போன மாணவர்களைத் தேடும் பணியில் பொலிஸாரும் அப்பகுதி மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment