வெள்ளத்தால் ஓட்டமாவடி, வாழைச்சேனையில் ஐயாயிரம் பேரளவில் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 27, 2024

வெள்ளத்தால் ஓட்டமாவடி, வாழைச்சேனையில் ஐயாயிரம் பேரளவில் பாதிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 455 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகித நகர் கிராம சேவகர் பிரிவில் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் 179 குடும்பங்களைச் சேர்ந்த 517 நபர்களும் மாஞ்சோலை, மீராவோடை மேற்கு, கிழக்கு, ஓட்டமாவடி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் 276 குடும்பங்களைச் சேர்ந்த 903 நபர்களும் உறவினர், நண்பர்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள் பிரதேச செயலகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பிரதேச தனவந்தர்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதுடன், இவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பணிகளை முன்னெடுக்க பிரதேச செயலகத்தினால் அவசர அனர்த்தக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 505 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் கிண்ணையடி, மீராவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவுகளில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நாசிவன்தீவு கிராமத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன், அங்கு 543 குடும்பங்களைச் சேர்ந்த 1,623 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.

இதேவேளை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 388 நபர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment