ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் இன்று (28) காலமானார்.
1944 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி பிறந்த, சட்டத்தரணியான எம்.எச். சேகு இஸ்ஸதீன் மரணிக்கும்போது வயது 80 ஆகும். அவரது சொந்த ஊரான அக்கரைப்பற்றில் அவர் காலமானார்.
தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், முஸ்லிம் தேசியவாதத்திற்காக குரல் கொடுத்தார். இலக்கியத் துறையில் அதீத நாட்டம் காட்டிய அவர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுத்ததில் பிரதான பங்களித்தவர். 1982ஆம் ஆண்டு, சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை நிறைவு செய்த பின்னர், அன்னாரது அரசியல் பிரவேசம் ஆரம்பானது.
அரசியல் துறையில் வட கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக தனது பயணத்தை ஆரம்பித்த அவர், ஊடகப் பிரதி அமைச்சர், ஏற்றுமதி அபிவிருத்தி பிரதியமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
கவிதை உலகில் ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு நூல்களை எழுதியுள்ளதோடு, அரசியலையும் கவிதை நயத்துடன் மக்கள் முன் கொண்டு சேர்ப்பதில் வித்தகராக விளங்கிய அவர், வேதாந்தி எனும் புனைப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.
இலங்கை அரசியலில் பேச்சாற்றல் மிக்க தலைவராக இருந்த எம்.எச். சேகு இஸ்ஸதீன் பங்குபற்றிய அரசியல் கூட்டங்களுக்கு பல்வேறு ஊர்களிலிலுமிருந்து மக்கள் கலந்து கொள்வர் என அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்றையதினம் அக்கரைப்பற்றில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment