வெளிநாட்டிலிருந்து கொலை செய்ய ஒப்பந்தம் : பேருவளையில் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 26, 2024

வெளிநாட்டிலிருந்து கொலை செய்ய ஒப்பந்தம் : பேருவளையில் இருவர் கைது

பேருவளை கணேஅரம்ப பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்த ஒருவர் வழங்கிய ஒப்பந்தத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்து வர்த்தகர் ஒருவரை தாக்கிய ‘முல்லேரியாவே ரத்தரன்’ எனப்படும் நபர் உட்பட இருவரை பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேருவளை கணேஅரம்ப பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு வந்த இருவர் கடை ஒன்றின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றமை தொடர்பில் பேருவளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி இரவு முகமூடி அணிந்து, வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நிலையில், அவர் மயிரிழையில் உயிர் தப்பியதோடு, தோள்பட்டை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்த பேருவளை பொலிஸ் நிலையம் நேற்றையதினம் (25) அதிகாலை அம்பேபிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் நின்ற இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த குற்றத்தை புரிந்த சந்தேகநபர்கள் இவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

குறித்த கடை உரிமையாளரை தாக்க பயன்படுத்திய கூரிய ஆயுதம் ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் புகையிரத பாதைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றின் இலக்கத் தகட்டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட ஒன்று என்றும் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள ஒருவரிடமிருந்து வட்ஸ்அப் ஊடாக பெறப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முல்லேரியா பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ‘முல்லேரியாவே ரத்தரன்’ என அழைக்கப்படும் நபர் மற்றும் மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். 

‘முல்லேரியாவே ரத்தரன்’ என அழைக்கப்படும் குறித்த நபர் மீது இதற்கு முன்னரும் தாக்குதல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கடையின் உரிமையாளரை தாக்கிய விதம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அடையாள அணிவகுப்பிற்காக ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment