இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நாளை (21) காலை 10 மணியுடன் குறித்த கால அவகாசம் நிறைவடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுமாறு நான் வழங்கியிருந்த நேரம் நாளை காலை 10 மணியுடன் முடிவடைகிறது.
இந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றி, அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படும் அபாயத்தைத் தவிர்க்கவும் நாளை காலை 10 மணி வரை அவகாசம் உள்ளது.
எனினும், ஜனாதிபதி அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை மீறி, நாளை காலைக்குள் இந்த அறிக்கையை வழங்கத் தவறினால், நான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை முன்வைப்பேன்" என தெரிவித்தார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தேவையான போது வெளிப்படுத்த தயார் என அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment