வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்காக சிறை செல்லவில்லை : காலையில் அம்பி, மாலை அந்நியனாகவும் நடந்து கொள்கின்றார் - வைத்தியர் பிறேமினி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 24, 2024

வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்காக சிறை செல்லவில்லை : காலையில் அம்பி, மாலை அந்நியனாகவும் நடந்து கொள்கின்றார் - வைத்தியர் பிறேமினி

வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்காக சிறை செல்லவில்லை. மற்றவர்களை அவமானப்படுத்தி பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்தில் தான் சிறை சென்றார் என வைத்தியர் பிறேமினி தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மிதிலைச்செல்வி, வைத்தியர் அர்ச்சுனாவிடம் துண்டுப்பிரசுரத்தை கையளித்தபோது, அவர் அநாகரிகமான நடந்து கொண்டமையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

வைத்தியருடன், அவரது சக வேட்பாளரான பெண் சட்டத்தரணி ஒரே மேசையில் இருந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே இந்த விடயம் நடைபெற்றது. ஆனால் அவர் தான் ஒரு தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்ததால், அதனை அவதானிக்கவில்லை என சொல்லி இருக்கிறார் அது முற்றிலும் பொய். அவர் ஒரு பெண்ணாகவும், சட்டத்தரணியாகவும் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. அது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை தருகிறது.

துண்டுப்பிரசுரத்தை பெண் வேட்பாளர் கையளித்தபோது வாங்க விரும்பாவிடின் வாங்காது தவிர்த்து இருக்கலாம். அவரை அவ்வாறு அவமானப்படுத்தி இருக்கக்கூடாது.

வைத்தியர் அர்ச்சுனா காலையில் அம்பி போன்றும் மாலையில் அந்நியன் போன்றும் நடந்து கொள்கின்றார். அவரை பற்றி விளங்கி கொண்ட பலர் தற்போது அவரை புறக்கணிக்கின்றார்கள்.

தான் நாட்டுக்காக சிறை சென்றேன் என்கிறார். அவர் நாட்டுக்காக சிறை செல்லவில்லை. மற்றவர்கள் மீது அவதூறு பரப்பியமைக்கு, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்காது, நீதிமன்ற பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காகவே சிறை சென்றனர்.

அதேவேளை, இவர் தொடர்ந்து வைத்தியர்களை அவமானப்படுத்தி வருகின்றார். அண்மையில் கூட வைத்தியர் சத்தியமூர்த்தியை தரக்குறைவாக பேசும் வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இவ்வாறு அவர் தொடர்ந்து வைத்தியர்களை அவமானப்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment