பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக மொஹமட் றிஸ்வான் : துணை தலைவராக இளம் வீரர் சல்மான் அலி ஆகா - News View

About Us

About Us

Breaking

Monday, October 28, 2024

பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக மொஹமட் றிஸ்வான் : துணை தலைவராக இளம் வீரர் சல்மான் அலி ஆகா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கான புதிய தலைவராக அனுபவ துடுப்பாட்ட வீரரான மொஹமட் றிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் தலைமை பதவியில் இருந்து பாபர் அசாம் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக தற்போது மொஹமட் றிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று பாபர் அசாம் கேப்டன்சியை இராஜினாமா செய்தார். அதன்பின் பாகிஸ்தான் அணியின் T20 கேப்டனாக ஷாகீன் அப்ரிடி கொண்டு வரப்பட்டார். ஆனால் ஷாகீன் அப்ரிடியின் செயல்பாடுகள் நிர்வாகிகள் மற்றும் இரசிகர்களிடையே திருப்தியை கொடுக்கவில்லை.

இதனால் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் T20 அணி கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் கொண்டுவரப்பட்டார். ஆனால் அப்போது லீக் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதன்பின் மீண்டும் கேப்டன்சியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பாபர் அசாம். தொடர்ந்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியிலும் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. 

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய white-ball கேப்டனை நியமனம் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் முடிவில் நட்சத்திர வீரர் மொஹமட் றிஸ்வான் பாகிஸ்தான் அணியின் புதிய ஒருநாள் மற்றும் T20 கேப்டனாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு உறுதுணையாக இளம் வீரர் சல்மான் அலி ஆகா துணை தலைவராக கொண்டுவரப்பட்டுள்ளார். இதுவரை மொஹமட் றிஸ்வான் white-ball கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை ஒருமுறை கூட வழிநடத்தியதில்லை. ஆனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது பாபர் அசாம் காயம் காரணமாக விலகியதால், 2 டெஸ்ட் போட்டியில் மொஹமட் றிஸ்வான் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டனை தேர்வு செய்வதில் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனினின் பங்கும் இருந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அணிக்குள் ஏராளமான பிரிவுகள் இருந்து வந்தது. அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் றிஸ்வான் செயல்பட்டு வந்ததோடு, பேட்டிங் ஃபார்மிலும் இருந்ததால் அவருக்கு கேப்டன்சி அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment