கொலை, கடத்தல், காட்டிக் கொடுக்காதவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் மட்டுமே போட்டியிடுகின்றனர் - சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 12, 2024

கொலை, கடத்தல், காட்டிக் கொடுக்காதவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் மட்டுமே போட்டியிடுகின்றனர் - சாணக்கியன்

தூய்மையான உறுப்பினர்களை மட்டுமே வேட்பாளர்களாக இலங்கை தமிழரசுக் கட்சி களமிறக்கியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக் கொடுக்காதவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு - கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன், நீண்ட காலத்திற்கு பின்னர் தூய்மையான தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட வேட்பாளர்களைக் கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சி களமிறங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது எமது வேட்பாளர்கள் சிறந்த வேட்பாளர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. எமது கட்சியில் ஊழல் அற்ற, கடந்த காலத்தில் மோசடிகளில் ஈடுபடாதவர்களை எமது வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கியுள்ளோம்.

ஏனைய கட்சிகள் இது தொடர்பில் பேச முடியாது. கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் அதிகளவில் ஈடுபட்டவர்கள் ஏனைய கட்சிகளில் போட்டியிடுகின்றார்கள்.

தமிழ் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக் கொடுக்காதவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஏனைய பிரதான கட்சிகளை பார்த்தால் தமிழ் பேசும் மக்களாகவே களமிறக்கப்பட்டுள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி இரண்டிலும் இரு இனங்களையும் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றார்கள்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் எமது கட்சியின் வேட்பாளர் தெரிவின்போது சிலசில விமர்சனங்கள் இருந்தது. ஆனாலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு தமிழரசுக் கட்சியை ஆதரிக்ககூடிய வகையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த காலத்தில் போட்டியிட்ட இருவர் மட்டுமே இம்முறை போட்டியிடுகின்றோம். ஏனைய ஆறு வேட்பாளர்களும் புதிய முகங்களாக களமிறக்கப்பட்டுள்ளார்கள். கடந்த நான்கு வருட காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தாலும் கூட இலஞ்சம், ஊழல் மோசடி, காணி அபகரிப்பிலேயே அவர்களின் காலங்களை கடத்தியிருந்தார்கள்.

இன்னுமொருவர் இதுதான் நான் இறுதிமுறை என்று தேர்தலில் போட்டியிட்டு அவரது கூடுதலான காலத்தினை லண்டனில் கழித்துவிட்டு தேர்தலில் குதித்திருகின்றார்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியும் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற ஒரேயொருவர் நான்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் எனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். 

நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை பெற வேண்டும் என்பதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment