(இராஜதுரை ஹஷான்)
இப்ராஹிமை பாதுகாப்பதற்காக ரவி, சானி தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகைளை மேற்கொண்ட அல்விஸ் மற்றும் இமாம் குழு அறிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இவ்விரு அறிக்கைகளையும் புறக்கணிப்பதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் அடிப்படையற்றதுடன், சிறுபிள்ளைத்தனமானது.
புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தரப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நீதியரசர் (ஓய்வுநிலை) அல்விஸ் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை அரசாங்கம் நிராகரித்தது.
குழுவின் தலைவர் அல்விஸ் முறையற்ற செயற்பாடுகளினால் நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆகவே அவர் தலைமையிலான குழு அறிக்கையை ஏற்க முடியாது என்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
அல்விஸ் குழுவின் தலைவர் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்திடம் வலியுறுத்தினேன். இதுவரை எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.
ஏதேனும் விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமிக்கப்படும்போது குழுவின் உறுப்பினர்கள் தொடர்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் காணப்படுமாயின் அவற்றை ஆரம்பத்திலேயே குறிப்பிட வேண்டும். குழு அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர் அதன் உள்ளடக்கம் தமக்கு எதிரானதாக இருப்பதை அறிந்து அறிக்கைகளை எதிர்க்கக்கூடாது.
அல்விஸ் அறிக்கையை போன்றே இமாம் அறிக்கையையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளது. புறக்கணிப்புக்கான காரணிகள் அடிப்படையற்றதுடன், சிறுபிள்ளைத்தனமானது.
ஊடக சந்திப்பை நடத்தி அறிக்கைகளை புறக்கணிப்பதாக குறிப்பிடாமல் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சென்று புறக்கணிப்பதற்கான காரணத்தை அரசாங்கம் ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டும்.
குண்டுத் தாக்குதலின் பிரதான குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன, சானி அபேசேகர ஆகியோரை வைத்துக்கொண்டு எவ்வாறு சிறந்த மற்றும் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.
குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட இரண்டு தாக்குதல்தாரிகளின் தந்தையான மொஹமட் இம்ராஹிமை பாதுகாப்பதற்காகவே குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர தலைமையில் முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
No comments:
Post a Comment