(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் உண்மையை கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதாக ஜனாதிபதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு வழங்கிய வாக்குறுதியை தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்ததபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீது இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை எரித்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதாக ஜனாதிபதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிடம் வாக்குறுதி வழங்கி இருக்கிறது. ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்களை அண்மையில் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த வாக்குறுதியை வழங்கி இருக்கிறார்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றம் நாளை மாத்திரமே கூடுகிறது. அப்படியாயின் பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி எப்போது அமைக்கப்போகிறார்.
பொதுவாக தெரிவுக்குழுக்களை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க திறமைசாலி. ஏதாவது பிரச்சினை தலைதூக்கும்போது அந்த பிரச்சினையை குறித்த குழுவுக்கு சாட்டிவிட்டு பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக் கொள்வார்.
எந்த பிரச்சினைக்காவது ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு அமைப்பதாக தெரிவித்தால், அந்த விடயம் இடம்பெறாமல் இருப்பதற்கே அதனை செய்கிறார். அதனால் ஜனாதிபதி, ஜம்இய்யதுல் உலமா சபைக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய தெரிவுக்குழு அமைப்பதாக இருந்தால், அதனை தாமதிக்காமல் உடனடியாக அவர் செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment