பரீட்சையை மீண்டும் நடத்துவதா ? வினாக்களுக்கு புள்ளிகளை வழங்குவதா? - விசாரணைகளின் பின் தீர்மானம் என்கிறார் ஆணையாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 19, 2024

பரீட்சையை மீண்டும் நடத்துவதா ? வினாக்களுக்கு புள்ளிகளை வழங்குவதா? - விசாரணைகளின் பின் தீர்மானம் என்கிறார் ஆணையாளர் நாயகம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினா பத்திரத்தில் மூன்று வினாக்களை நீக்கிவிட்டு அதற்கான புள்ளிகளை வழங்குவதா அல்லது பரீட்சையை மீண்டும் நடத்துவதா என்ற இறுதித் தீர்மானம் இடம்பெறும் விசாரணைகளின் பின்னரே எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாப்பத்திரம் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதா என தேடிப்பார்ப்பதற்காக பரீட்சைகள் திணைக்களம் தற்போது பூரண விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாப்பத்திரம் என தெரிவித்து, போலி வினா பத்திரம் ஒன்று சமூக வலைத்தலங்களில் பிரசுரமாகியமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பாகவே ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வினாப்பத்திரம் தயாரித்த குழுவை அழைத்து, குறித்த போலி வினாப்பத்திரம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், குறித்த போலி வினாப்பத்திரத்தில், நிச்சயிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை வினாப்பத்திரத்தில் இருந்த 3 வினாக்களுக்கு நிகரான வகையிலான 3 வினாக்கள் மாத்திரம் இருந்ததாக அவர்களால் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் குறித்த மூன்று வினாக்களையும் நீக்கிவிட்டு, பதிப்பீடு செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

என்றாலும் நேற்று புதன்கிழமை (19) புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பரீட்சை திணைக்களத்துக்கு முன்னால் முன்னெடுத்த ஆர்ப்பட்டத்தைத் தொடர்ந்து, ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை முன்னெடுப்பதா அல்லது பரீட்சையை மீண்டும் நடத்துவதா என்ற இறுதித் தீர்மானம், தற்போது இடம்பெற்றுவரும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment