தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபையின் 7 பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (08) வியாழக்கிழமை கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர்.
அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களும் இறுதிப் பட்டியலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேத்திரன், அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், எமது பொது வேட்பாளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் என்பதனால் சுயேட்சையாக போட்டியிட முடியும். அதனால் அவர் சுயேட்சையாகவே போட்டியிடுகிறார்.
தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட கூடிய 75 தொடக்கம் 80 பேர் வரையிலானவர்களின் பெயர்களை பரிசீலித்தே, பா. அரியநேத்திரனை தெரிவு செய்துள்ளோம்.
இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த பலரும் எமக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். கட்சியின் முடிவு ஓரிரு நாட்களில் வெளிவரும் என நம்புகிறோம்.
நாம் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். எம்முடன் இணைந்து பயணிக்க விரும்புவோர் பயணிக்க முடியும்.
இன்னமும் ஓரிரு நாட்களில் வேட்பாளருக்கான கட்டுப்பணத்தினை செலுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.
யாழ். விசேட நிருபர்
No comments:
Post a Comment