ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாமல் ராஜபக்ஷவை நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தம்மிக பெரேராவை வேட்பாளராக களமிறக்க அக்கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட பின்வாங்கியுள்ளதால் நாமல் ராஜபக்ஷவை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லையென்றும் அதற்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றியென்றும் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா, பொதுஜன பெரமுனவின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை (07) காலை பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் அக்கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக, கட்சியின் நிறுவுனரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக உள்ள நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். பசில் ராஜபக்ஷவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கேற்றாற் போல், நாமல் ராஜபக்ஷவின் பல்வேறு புதிய அரசியல் ரீதியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment