அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலக 81 வயதான ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில் அவர் இவ்வாறு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
தனது தீர்மானம் குறித்து இவ்வார இறுதியில் நாட்டு மக்களிடம் தௌிவுபடுத்தவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளார்.
தனது வாழ்நாளில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தமை பெரும் கௌரவத்திற்குரிய விடயம் என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடன் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்திருந்த நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டியிலிருந்து விலகும் தனது முடிவை அறிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வெற்றி கிடைக்காமல் போகலாம் என்பதை அவர் ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகின்றது.
பைடன் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்புடன் நடந்த விவாதத்தில் மோசமாகத் தடுமாறியதைத் தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்துள்ளது.
பைடனின் வயது குறித்தும் அவர் நவம்பரில் வெற்றியடைவது பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்க மக்களவை முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி சில கருத்துக் கணிப்புகளின் தகவல்களை பைடனுடன் பகிர்ந்து கொண்டதாக CNN செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வெற்றியடையும் சாத்தியம் குறைவு என்றும் கருத்துக் கணிப்புகளில் தெரிவதாக பெலோசி கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இது தொடர்பான தமது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கும் ஜோ பைடன் ஒப்புதலளித்துள்ளார்.
இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் 78 வயதான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment