ஒப்பந்தத்தில் நியாயமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும், 26 சதவீதமான மக்கள் உள ரீதியாக பாதிப்பு - கலாநிதி ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Friday, July 19, 2024

ஒப்பந்தத்தில் நியாயமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும், 26 சதவீதமான மக்கள் உள ரீதியாக பாதிப்பு - கலாநிதி ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டுள்ள சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமையவே எமக்கும் செயற்பட வேண்டியேற்படும். அவ்வாறில்லை எனில் மீண்டும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். எவ்வாறிருப்பினும் அந்த இணக்கப்பாட்டில் நியாயமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்ற யதார்த்தமான வாக்குறுதியை மக்களுக்கு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளமையால் 26 சதவீதமான மக்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். பணவீக்கம் குறைவடைதல் என்பது பொருட்களின் விலை அதிகரிக்கும் வேகம் குறைவடைவதாகும். மாறாக பொருட்களின் விலை குறைவடைவதைக் குறிக்காது. மறுபுறம் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு பதிலாக அவற்றின் எடை குறைக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மக்கள் 79 சதவீதமானோர் கடந்த காலத்தை விட தற்போது சந்தோஷமாக வாழவில்லை என்றும் அந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்துக்கமைய எவ்வாறு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். அதிக வருமானம் பெருவோருக்கான வருமான வரியை தற்காலிகமாக அதிகரித்து, ஏனையோருக்கு நிவாரணங்களை வழங்க முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைவரும் நியாயமான வரிச் சலுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நாம் யதார்த்தமான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்குள்ளேயே எமக்கும் செயற்பட வேண்டியேற்படும். அவ்வாறில்லை என்றால் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது. எவ்வாறிருப்பினும் அதில் நியாயமான மாற்றங்களை ஏற்படுத்வோம் என்றார்.

No comments:

Post a Comment